சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து பயணித்தார்கள். இன்னொரு கட்சி தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து சின்னாபின்னமாக்குவதில் அரசோடு கூடியிருந்தவர்கள். இப்பொழுது தமிழ் தேசியம் பேசினால் தான் வாக்கெடுக்கலாம் என்று சொன்னால் அவ்வாறானவர்களை கடுமையாக எதிர்ப்போம்.
அவ்வாறானவர்களுடன் இணைந்து எந்த தேர்தலையும் நாங்கள் பங்குகொள்ளும் சூழ்நிலை கிளிநொச்சியில் இருக்காது.
யாழ்ப்பாணத்தில் யாரும் இணைந்து செயல்பட்டால் அது அவர்களை பொறுத்தது.
சந்திரகுமார் அணியுடன் இணைந்து அரசியலில் பயணிக்க முடியாது என்பதை மத்திய குழுவில் கூட்டத்திலும் தெளிவாக தெரிவித்திருக்கிறேன். தலைவருக்கும் ஏனையவருக்கும் தெளிவாக சொல்லியுள்ளேன்.
ஏற்கனவே சிறிரெலோவை இணைத்த போதும் சத்தியலிங்கத்துக்கு அதனை சொன்னேன். இவர்களால் ஆபத்து வரும் என்பதை தெரிவித்தேன். தற்போது சிறிரெலோ தலைவர் என்னத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்? அடைத்து வைக்கப்பட்டுள்ளார்? அதனால் எமது கட்சிக்கு எவ்வளவு விழுக்காடு என்பது தெரியும்.
கடந்த காலத்தில் ஒருவரும் சாகவில்லை. இறந்தவர்கள் எல்லாம் புலிகள் என்று சொல்லி டிப்போ சந்தியில் ஊர்வலம் நடத்தியவர். பல பாடசாலைகளில் இருந்த அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர்.
அபிவிருத்தி செய்து தமிழர்களை காப்பதாக சொன்னவர்கள். இன்று தமிழ் தேசியம் தான் கதி என்றால் இவ்வளவு காலமும் அவர்கள் சரியா என்பதை மக்கள் முடிவு எடுப்பர் – என்றார்
What’s your Reaction?
