திருகோணமலை மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது.
இன்றைய தினம் (24.04.2026) குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முதல்வர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான மாற்றிடத்தை வழங்கியதுடன் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டனர்.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் வீதியில் வைத்து நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் இதனால் விபத்துகளும் ஏற்படுவதாகவும் குறித்த பகுதியில் நடைபாதை வியாபாரத்தை மேற்கொள்ள மாநகரசபை தடை செய்ய தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் (24) குறித்த இடத்திற்கு மாநகரசபை முதல்வர் க.செல்வாஜா, மற்றும் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் அவ்விடத்திற்கு வருகைதந்து பிரதான வீதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற 8 வியாபாரிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு மாநகரசபையால் அமைக்கப்பட்ட வண்டியில் விநாயகபுரம் வீதியில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கியது. அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பிரதான வீதியில் வைத்து வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
