பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளரின் தலையீட்டுடன் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் மீது அண்மையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதில் உள்ள தகவல்களை ஏலத்திற்கு விட்டு பணம் பெறுவதற்கு அந்த தரப்பினர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதலினால் அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த தகவல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சில பொதுவான தகவல்கள் மாத்திரமே மற்றுமொரு தரப்பிற்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமையவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவின் போது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாகவும் தமது நிறுவனம் தற்போது தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் எவ்வாறான முறையில் இடம்பெற்றது மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துத் தமது நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், சந்தேகநபர்களைக் கண்டறியும் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
