நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள டயகம மேற்கு 03-ஆம் பிரிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம்(29.04.2026) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.01 மணி முதல் 10.10 மணி வரையிலான சுப வேளையில், மங்கல இசை முழங்க, பக்தர்கள் “அரோகரா” கோஷமிட மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக யாக பூஜை மற்றும் கும்ப பூஜைகள் இடம்பெற்றன. முதலில் வழிப்பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து புனித கும்பங்கள் வெளிவீதி உலா வந்தன. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும், மூலஸ்தான முத்துமாரி அம்மனுக்கும் விசேட அபிஷேகங்களும் கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கர்மாரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஏப்ரல் 28-ஆம் திகதி காலை 7.00 மணி முதல் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையின் புகழ்பெற்ற பிரதிஷ்டா பூஷணம், பிரதம குரு சிவஸ்ரீ ஜெயவிருபாட்ஷன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் குருக்களினால் கும்பாபிஷேக சமயக் கிரியைகள் அனைத்தும் சாஸ்திரோக்தமாக நிறைவேற்றப்பட்டன.
கலை, கலாசார மற்றும் ஆன்மீக சம்பிரதாயங்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதிப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
