யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (19.06.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களினால் இணைத் தலைமையுரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் தலைமையுரையாற்றப்பட்டது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்,
வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், பிரதி முதல்வர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


