சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (14.04.2026) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர்.
காணாமல் போன இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஹபராதுவ பகுதியில் மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று மாலை ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு களுக்கல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களாவர். இவர்கள் கட்டுநாயக்க பகுதியில் இருந்து சுற்றுலா வந்திருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹபராதுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
