மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வழங்கப்படுகின்ற கஞ்சி காய்ச்சப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடரை தவிசாளர் ஏற்ற தொடர்ந்து 17 ஆண்டுகள் நினைவாக 17 சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலி மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன. தொடர்ந்து அருகிலுள்ள ஆலயத்தில் வழிபாடு முன்னெடுக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்குப் பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


