தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை பொருத்தமான விதத்தில் அணிவது
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் என மேற்பார்வைப் பொது சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற உணவுகையாளும் நிறுவன ஊழியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையாகவும் பொருத்தமான வேளைகளிலும் தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறலில் ஈடுபடுவது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும்.
உடலிலுள்ள அதிகளவான நுண்ணங்கிகள் காணப்படக்கூடிய இடங்களில் தலைமுடி முக்கியமானது. தலைமுடி உணவினுள் விழுவதன் மூலமோ அல்லது கைகளால் தலைமுடியைத் தொட்டபின் அதே கைகளால் உணவைக் கையாளுதல் மூலமோ உணவு மாசடைகின்றது. இதைத்தடுக்க பொருத்தமான தலையுறைகளை அதாவது
தொப்பியை அணியவேண்டும்.
தொப்பியை அணியும்போது தலைமுடி முழுவதும் மூடும்படியாக இருப்பதும், அது தலைக்கு காற்றோட்டததை வழங்கக்கூடியதாகவும் இருப்பது அவசியம்.
தலையுறைகளை மீண்டும் மீண்டும் பாவிக்கக்கூடாது. ஒருமுறை பாவித்தபின் பாவனையிலிருந்நு அகற்றப்படவேண்டும்.
தலைக்கு சாதாரண துணித்தொப்பியைப் பாவிக்கக்கூடாது. அது தலையில் வெப்பத்தை தேக்கி தலையில் அதிக வியர்வையை உருவாக்குவதால் ஊழியருக்கு அசௌகரியத்தையும் தலையில் நுண்ணங்கிகளின் பெருக்கத்தையும் அதிகரிக்கும். இதற்கு உயரமான மேல்புறம் காற்றோட்டத்துக்காக திறந்த அல்லது மிகச் சிறிய வலையமைப்புத் துவாரங்களையுடைய தொப்பிகளே உகந்தவை.
ஏப்பிறன் அணிவது ஊழியரை தீ விபத்துக்களிலிருந்து காக்கவும், அவர் மீது நேரடி வெப்பத்தாக்கத்தைத் தடுக்கவும், அவரது உடை அழுக்கடையாதிருக்கவும், அவரிலிருந்து வியர்வை மற்றும் அழுக்குகள் உணவுடன் சேர்வதைத் தடுக்கவும் உதவுகின்றது.
ஏப்பிரன்கள் தீவிபத்தின்போது இலகுவாக கழற்றி அகற்றக்கூடியதாகவும் தீப்பற்றும் ஆற்றல் குறைந்த தடித்த பருத்தித்துணிகளால் ஆனதாகவும், சட்டைப்பைகள் எதையும் கொண்டிராதவையாகவும், எப்போதும் சுத்தமாகப் பேணுவதற்காக வெள்ளை அல்லது மெல்லிய நிறத் துணியினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். தினமும் சுத்தமான ஏப்பிறனையே அணிந்திருக்க வேண்டும்.
கையுறைகளை கைகளில் அணிந்துகொண்டு எப்போதும் உணவு பரிமாறும் வேலை செய்வது தவறு. இதனால் எல்லா மேற்பரப்புகளுடனும் கையுறைகள் தொடர்புபட்டு விரைவாக மாசுபட்டு அது பரிமாறும் உணவை மாசாக்குகின்றது.
உணவிடுக்கியினால் எடுத்துப் பரிமாற முடியாத இடியப்பம், தோசை போன்ற உணவுகளை இறாக்கையினுள்ளிருந்து எடுத்து தட்டில் எண்ணிவைத்தபின் இறாக்கையினுள் கழற்றி வைத்துவிட வேண்டும். எப்போதும் கைகளை சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் கழுவியபின் உணவு பரிமாறுவதே பாதுகாப்பானது.
சமைக்கும்போதும் உணவு பரிமாறும்போதும் வாய்குள் எந்தப்பொருட்களையும் இட்டு மெல்லக்கூடாது. அத்துடன் முகக்கவசம் அணிந்திருப்பது வரவேற்கத்தக்கது.
கால்களில் உணவகத்தினுள் மட்டும் அணியக்கூடிய ,எண்ணை மேற்பரப்பில் வழுக்காத அடியமைப்பையுடைய பொருத்தமான காலணிகளை அணிந்திருக்கவேண்டும். அத்துடன் அரைக்காற்சட்டை, சாரம் அணிவதும், மேலுடல் தெரியக்கூடிய பெனியன் அணிவது அல்லது மேலாடை அணியாது உணவு சமைப்பது, பரிமாறுவது தவிர்க்கப்படவேண்டும்.
இவ்வாறாக தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை ஏன் அணியவேண்டும் என்ற காரணங்களை அறிந்து பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதத்தில் அவற்றைப் பயன்படுத்துவது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும்- ஊழியர் நலனை மேம்படுத்தவும் உதவும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
