முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் : வரலாற்றை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உறுதி.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர் இனவழிப்பின் உயிருள்ள சாட்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வரை நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது என வலியுறுத்தி, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கஞ்சி வழங்கும் நிகழ்வு காரைதீவு முச்சந்தி பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தர் பிறந்த அறிவுடையோர் நிறைந்த இம்மண்ணில் நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷாந்தன் உட்பட முக்கிய கட்சி செயற்பாட்டாளர்(ஆனந்தசபேசன்)கலந்து கொண்டனர்.
காரைதீவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், சமாதான நீதவானுமான பொன்னம்பலம் இராஜரெட்ணம் தலைமை வகித்ததோடு இனப்படுகொலைக்கு தீர்க்கமான முடிவு ஒன்று வேண்டும் என்றும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றியவர்கள், “முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வெறும் உணவு அல்ல; அது தமிழர் இனவழிப்பின் வலியும் வாழ்வும் கலந்த வரலாற்றுச் சின்னமாகும். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனஅழிப்பின் நினைவுகளை அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கொண்டு சென்று, அடுத்த தலைமுறைகளுக்கும் இந்த வரலாற்றை உணர்த்தும் நோக்கில் இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன” என தெரிவித்தனர்.
மேலும், “இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒரு சாதாரண ஒன்று அல்ல; தமிழர் வரலாற்றை நினைவூட்டும் வரலாற்று நிகழ்வாகும். ஆகையால் இது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
நிகழ்வில் தமிழ் பற்றாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், பொதுமக்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிருபர்
மின்மினி மின்ஹா


