புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் நேற்று பிற்பகல்(03.06.2026) மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு பிரதேச காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
நாகர்கோவில் கிழக்கு பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர்.
காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்திய அதிகாரிகள், அங்கு மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப் பெறுமதியைக் கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பொதிகளை மீட்டெடுத்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் யார்? இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? மற்றும் யாருக்கு விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தன? என்பது குறித்து விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூ.லின்ரன்
வடமராட்சி, பச்சிளைப்பள்ளி நிருபர்

