06.04.2026
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன் நிலைபெறுகின்றது.
அதன்படி, இன்று (06.04.2026) நண்பகல் 12:13 மணியளவில் பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெலை, உடவலவை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பமான காலநிலை என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதோடு, அதிகளவில் நீரை அருந்துவது உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
