ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ இன்று (31.03.2026) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இதன்போது இலங்கைக்கு கச்சா எண்ணெய் வழங்குவது தொடர்பில் ரஷ்யா தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்குச் சதித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாக சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று (30.03.2026) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற பந்தம் ஏந்திய போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வைத்தியர் ஜி. வீரசிங்க, ரஷ்யாவிலிருந்து உடனடியாக எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.
