பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காக்கும் சட்டம்’ அடக்குமுறைகளைத் தான் மீண்டும் கொண்டுள்ளதா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நீதியமைச்சால் 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்த சட்ட முன்மொழிவு, 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு நவீன மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பழைய சட்டம், சித்திரவதை, தன்னிச்சையான கைது, வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் சிறுபான்மை மக்களையும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்க பயன்படுத்தப்பட்டதாக நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய சட்ட முன்மொழிவும் அதேபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் வகுத்துள்ள சர்வதேச அளவுகோல்களை இந்த சட்டம் பூர்த்தி செய்யவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை மேற்கொண்ட மனித உரிமை உறுதிமொழிகளையும் இது மீறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய துணை இயக்குனர் மீனாக்ஷி கங்குலி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது காலம் கடந்த தேவையாக இருந்தாலும், புதிய சட்ட முன்மொழிவில் அதே அதிகார துஷ்பிரயோகங்களை செய்ய அனுமதிக்கும் பல பிரிவுகள் உள்ளதாக கூறியுள்ளார்.
உடனடியாக பழைய சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி, பொதுமக்களின் உண்மையான பங்கேற்புடன் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2024 ஜனாதிபதி தேர்தலின் போது, அடக்குமுறைச் சட்டங்களை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த நிலையில், இந்த புதிய சட்டம் அதற்கு முரணாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சில சர்ச்சைக்குரிய விதிகள் இந்த புதிய சட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிமக்கள் அமைப்புகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர்களின் பரிந்துரைகள் சட்டத்தில் இணைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது, 2024 முழு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கைது எண்ணிக்கையை விட அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
