சமூக ஊடகங்களில் கடந்த முதலாம் திகதியன்று பரவிய ஒரு ஒலி பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளில் தங்கியுள்ள உள்ளூர் போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள், இலங்கையில் உள்ள தங்களது சகாக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குமாறு அறிவுறுத்தியதாக அந்த பதிவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22 நிமிடங்கள் நீளமான இந்த குழு தொலைபேசி உரையாடலில், ரஸல் ஸ்மித், பிரெஞ்ச் ரூபன், இங்கிலாந்தைச் சேர்ந்த குடு லால் மற்றும் வெல்லே சரங்கா ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சாட்டுடைய நபர்கள் எதிர்கால திட்டங்கள், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
டுபாய் அதிகாரிகள் வெல்லே சரங்காவை கையாண்ட விதத்துக்கு பழிவாங்கும் நோக்கில், இலங்கைக்கு வரும் அமீரக குடிமக்களை இலக்காக்க வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ. வூட்லர், இந்த ஒலி பதிவு தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
எனினும், சுற்றுலா காவல்துறை பிரிவு இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த தகவல் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
