சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.
அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் 16 விருதுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி, 17 விருதுகளுடன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
