இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்கள் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் ஊடாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கருவியாக விளங்குகின்றன என்று தெரிவித்தார்.
இவை, இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து, அனுபவ மற்றும் சிறந்த நடைமுறைப் பரிமாற்றங்களுக்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டம் பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயற்பாடுகளின் ஆரம்பத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதாகவும், 1994 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, ஜனநாயகம், சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இச்சங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்ச்சியான உரையாடல்களையும் மக்களுக்கிடையிலான தொடர்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பாராளுமன்ற மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். அரசியல் தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பையும் தலைமைத்துவத்தையும் அதிகரிக்கும் நோக்கில், இரு நாடுகளின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பும் கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக அமைந்தது. விவசாயம், சுரங்கத் தொழில், சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, உற்பத்தித் துறை உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், எக்ஸ்போ 2027 வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க வர்த்தக பிரதிநிதிக் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தையும் தென்னாப்பிரிக்கத் தரப்பினர் முன்வைத்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விளையாட்டு உறவுகளை கருத்திற்கொண்டு, கிரிக்கெட் மற்றும் ரக்பி ஊடாக விளையாட்டு அடிப்படையிலான இராஜதந்திரத்தை மேம்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பல்கலைக்கழக கூட்டாண்மைகள், புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன.
இலங்கையின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் ெபாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ நன்றியுரையாற்றினார்.
What’s your Reaction?

