தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிரக் கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தீவிரக் கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எச். றிபாஸ் வரவேற்புரையாற்றியதுடன், பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தலைமையுரையாற்றினார். மாணவர்களின் ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்புணர்வு, மொழித்திறன் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகக் கல்வி பாட அறிவுடன் மட்டுமன்றி சமகால உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கு தீவிரக் கற்கைநெறி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன், தமிழ், அரபு, ஆங்கில மொழிப் புலமை, தகவல் தொழில்நுட்ப அறிவு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் திறன் மற்றும் சரியான Prompting திறன் ஆகியவை எதிர்காலப் பட்டதாரிகளுக்கு இன்றியமையாதவை எனக் குறிப்பிட்டார். மேலும், தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களுடன் சமூகப் பொறுப்புணர்வும் தொழில்முறை ஒழுக்கமும் கொண்ட பட்டதாரிகளாக மாணவர்கள் உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில் உதவி விரிவுரையாளர் எம்.எஸ்.எவ். பஹீமா நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கல்விசார் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்

What’s your Reaction?

