வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
கல்வியால் மாத்திரம் ஒரு மாணவன் முழுமையடைந்து விட முடியாது என்பதை நான் பல இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றேன். கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலமே முழுமையான ஆளுமை வளர்ச்சியைப் பெற முடியும்.
தற்காலத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால், பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கல்வியில் சிறந்த அடைவுகளைப் பெறுவதற்கு ஆரோக்கியமான உடலும் உளமும் அவசியமாகும். அதனை இவ்வாறான விளையாட்டுச் செயற்பாடுகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
மாகாண மட்டப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் தேசிய மட்டப் போட்டிகளிலும் எமது மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெற்றிவாகை சூடி மாகாணத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். இது தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியிலும் விசேட கவனம் செலுத்தி வருகின்றேன். நீங்கள் விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்குத் தேவையான அனைத்து வழிகளிலும் உதவக் காத்திருக்கின்றோம், என தெரிவித்தார்.

What’s your Reaction?

