உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறையின் பின்னணி அம்பலம்..!

negombo prison incident revealed | Pathivu News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14.07.2026) தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும்.
இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.
சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ‘அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்’ என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது. முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன.
ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.
அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதலின்போது கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்ததுடன், அதிகாரிகள் மீது கற்கள், தடிகள் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்குதல் நடத்தியதாகவும் CID தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை தடய அறிவியல் பரிசோதனைக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலைக் குற்றச்சாட்டு, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டு வருவதாக CID தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp