இரண்டு வீடுகள் கையளிப்பு மற்றும் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் மேற்கு பகுதியில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் நேற்று (20.04.2026) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் “சொந்த இடம், அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த இரண்டு வீடுகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மூதூர் பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 206 வீடுகளை நிர்மாணிப்பதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் 41 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான முதற்கட்டமாக, இரு பயனாளிகளுக்கு நேற்றைய தினம் காசோலைகள் வழங்கப்பட்டதுடன், புதிய வீடுகளுக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நீண்ட நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரோஷனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.எம். சப்ரான் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறைந்த வருமானம் கொண்ட, வீடற்ற குடும்பங்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1266377048938754
What’s your Reaction?
