நுளம்புகள் முட்டையிடக்கூடிய இடங்களை அழிப்பதன் மூலமே அதன் குடித்தொகையைக் கட்டுப்படுத்தி டெங்கு பரவலைத் தடுக்கலாம் எனப் பூநகரிப் பிரதேச
மேற்பார்வைப் பொதுச் சுகாகதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
பூநகரிப் பிரதேசசெயலகம்,பூநகரிப் பொலிஸ்நிலையம், சுகாதார திணைக்களம் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து மேற்கொண்ட டெங்குக் கட்டுப்பாட்டு சிரமதானப் பணியின் இறுதியில் உரையாற்றியபோதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
டெங்கு நுளம்புகள் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியே காலை, மாலை வேளைகளிலேயே கடிக்கக் கூடியன. இவை நீர்தேங்கும் பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் இயற்கை செயற்கை கொள்கலன்களில் ஈரலிப்பு அல்லது நீருள்ளபோது முட்டைகளை அச் சுவரில் இட்டு ஒட்டிவிடுகின்றன. இம்முட்டைகள் நீரில்லாத நிலையிலும் ஆறுமாதங்கள் முதல் ஒருவருடம் வரை உயிர்ப்பாக இருந்து நீருள்ளபோது பொரித்து நிறைவுடலி நுளம்பாகக்கூடியன.
கொள்கலன்களின் சுவர்களில் முட்டைகள் ஒட்டியிருப்பதால் நீரை அகற்றினாலும் முட்டைகள் அகற்றப்படுவதில்லை. எனவே நீர்சேமிக்கும் தொட்டிகள் பறவை விலங்குகளுக்கு நீர்வைக்கும் பாத்திரங்களின் உட்புறச்சுவரை வாரமொருமுறையேனும் நன்றாக தேய்த்துக்கழுவி நீரை வெளியேற்ற வேண்டும். உக்கக்கூடிய சிறிய கொள்கலன்களை மண்ணினுள் புதைத்தும் உக்காத கொள்கலன்களை நீர் தேங்காத இடங்களில் சேமித்தும் வைக்க வேண்டும்.
குறிப்பாக வீடுகள் கட்டடங்களின் பீலிகளை நீர்தேங்காதவாறு அடிக்கடி சுத்தம்செய்தல், பழைய ரயர்களை மழைத்தூவானம் படாத இடங்களில் சேமித்துவைத்தல், இளநீர்க் கோம்பைகளை உடனடியாகவே நான்கு துண்டுகளாக பிளந்துபோடுதல், மலசல கூடக்குழிகளின் மூடியின் கீழ்ப்பகுதியை துவாரங்களின்றி அடைத்தல்,குழியில் வளியோட்டத்துக்காக பொருத்தியுள்ள குழாயின் மேல் முடிவிடத்தை துணி அல்லது நுளம்பு வலை அல்லது மிக நுண்ணிய துவாரங்களிடப்பட்ட பொருத்தமான மூடியால் மூடுதல் என்பவற்றில் கவனஞ் செலுத்தவேண்டும்.
குடிநீர் சேமிக்கும் கொள்கலன்கள், குளிக்க நீரைச் சேமிக்கும் தொட்டிகளை நுளம்புகள் உட்புகாதவாது துணி அல்லது நுளப்புவலை பொருத்தப்பட்ட மூடிகளால் மூடிவைக்க வேண்டும்.
சிரமதான வேலைகளில் ஈடுபடும் போது புற்களைச்செருக்குவதில் கவனஞ் செலுத்துவதைத் தவிர்த்து பொலுத்தீன்- பிளாஸ்டிக் கழிவுகளையும், நீரைத்தேக்கி வைக்கக்கூடிய கொள்கலன்களையும் அப்புறப்படுத்துவதில் முழுக் கவனத்தையும் செலுத்தவேண்டும்.
பிளாஸ்டிக் பொலுத்தீன்களை தகனம் செய்வதையும்
தவிர்க்கவேண்டும். எரித்தல் செயற்பாடு வளிமாசுபடுதலையும் சுவாசப்புற்றுநோயையும் ஏற்படுத்த வழிவகுக்கும்.
உங்கள் வீடுகளையும், நீங்கள் பணிபுரியும் தொழில் தளங்களையும், வழிபாட்டிடங்களையும் வாரமொருமுறை முப்பது நிமிடங்களாவது செலவழித்து கண்காணித்து நுளப்பு பெருகக்கூடிய இடங்களை அழித்துவிட வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் இரண்டு நாட்களுக்குமேல் தொடர்ந்தால் தாமதிக்காது மருத்துவ உதவியை நாடவேண்டும். காய்ச்சலுடையோர் போதிய நீராகாரங்களை உள்ளெடுப்பதோடு நுளம்பு வலையினுள் ஓய்வெடுக்க வேண்டும். காய்சலுக்காக மருத்துவ ஆலோசனையின்றி உங்கள் விருப்பப்படி மருந்துகளைப் பாவிப்பது, நீண்டநாட்கள் மருத்துவ ஆலோசனை பெறாது தவிர்ப்பது என்பன டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலைகளுக்கு இட்டுச்செல்லும்.அத்துடன் தாமதமாக வைத்தியசாலையை நாடும்போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பையும் சந்திக்க நேரிடும்.
குழந்தைகள், சிறுவர்கள், கர்பிணிகள் ,முதியோர் ,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் மிகுந்த எச்சரிக்கையுடனும்- கவனத்துடனும் செயற்படவேண்டும்.
ஒருமுறை டெங்கு நோயாளியைக் கடித்த ஈடிஸ் வகை பெண் டெங்கு நுளம்பு இன்னொருவருக்கு கடிக்கும்போது டெங்குநோயை ஏற்படுத்துவதோடு ஒருதடவையில் இருநூறு முட்டைகள் வீதம் தனது ஒன்றரை மாத வாழ்நாளில் நான்கு தடவைகளில் இடும் எண்ணூறு முட்டைகளிலும் டெங்கு வைரசைக் கடத்தி அவை பொரித்து வரும் டெங்குநுளம்புகள் கடிக்கும்போது டெங்குநோய் தீவிரமாக பரவும்.
டெங்கு வைரசை அழிக்க மருந்துகள் எதுவும் இல்லை. எனினும் நோய்நிலையில் நோயாளியின் உள்ளக குருதிப்பெருக்கு மற்றும் நீரிழப்பை கண்காணித்து பராமரிக்க மருத்துவமனையில் வைத்தியர்களின் கண்காணிப்பு அவசியமானது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
எனவே வருமுன் காக்கும் நடவடிக்கையாக நுளம்புகள் முட்டையிடும் இடங்களையும், குடம்பிகளையும் அழிப்பதே மிக வினைத்திறனானதும் சூழல்நேய நடவடிக்கையுமாகும் என்றார்.


