மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் “இலக்கிய மனனப் போட்டி – 2026” நடைபெறவுள்ளது.
மாணவர்களின் ஒழுக்கம், நல்லொழுக்கப் பாதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, 2026 ஆவணி 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி பிரம்மானந்தஜி மகராஜ் ஆசீர்வாதத்துடன் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. ஆர். திரவியராஜ்,
திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர். உதயகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் ஆ.தர்மதாச உள்ளிட்டோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலக்கியப் போட்டிகளில் திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது, ஆத்திச்சூடி ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், “விவேகானந்தமே ஆனந்தம்” என்ற தலைப்பில் 300 சொற்களுக்கு மேற்படாத சிறப்புப் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புத் திறமையை வெளிப்படுத்தும் 60 மாணவர்களுக்கு புத்தகங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
போட்டிக்கான தெரிவு நடவடிக்கைகள் 2026 ஆகஸ்ட் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மேல்நிலைகல்வி கற்ற நிர்வாக உத்தியோகத்தர்களும் பங்கு கொள்ளும் சான்றோர் சபையில் இந்நிகழ்வு ஒரு சிறப்பு நிகழ்வாக இடம்பெறவுள்ளன.
“அறிவை கற்போம் – ஒழுக்கம் பேணுவோம் – இலக்கியம் வளர்ப்போம்!” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நிருபர்
செல்வி வினாயகமூர்த்தி

What’s your Reaction?

