களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, தெஹிஓவிட்ட, எஹலியகொட, எட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் தற்போது 300 மில்லிமீட்டரை நெருங்கிய கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழை நிலவரம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கையில் பராமரிக்கப்பட்டு வரும் ஆற்றின் நீர்மட்ட அளவீட்டு கருவிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இச்சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

