தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
அதில் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை கெளரவிக்கப்பட்டார்கள்.
முன்னதாக போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் யாழ். மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து வெற்றி ஈட்டிய வீராங்கனைகள் , அவர்களின் பயிற்றுனர்கள் மாவட்ட செயலர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மேலதிக செயலர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.
குறித்த கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியினர் போட்டியிட்டதில் யாழ்.மாவட்ட அணியினர் வெற்றி பெற்றனர். இறுதி போட்டியில் வடமாகாணத்தில் இருந்து சென்ற இரு அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட அணியில் இருந்து வி. டிலக்சஷா மற்றும் ஆர். பிரியவர்ணா ஆகியோர் இலங்கை தேசிய கபடி மகளிர் அணிக்கு தெரிவாகி உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4629271844063144

What’s your Reaction?

