சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5,140,000 ரூபாய் பெறுமதியான கைபேசிகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
குறித்த கைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, பசுமை வழித்தடம் ஊடாக வெளியேற்ற முயன்ற போதே இந்த மூன்று சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரு சீன ஆண்களும் அடங்குவர்.
கைதான சீன ஆண்கள் இருவரில் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான பையை பரிசோதித்த போது, மிட்டாய்கள் மற்றும் சாக்கலேட்டுகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில கைபேசிகள் கண்டறியப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்த ஜாக்கெட் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில கைபேசிகளும் மீட்கப்பட்டன.
இதேவேளை, சீனப் பெண் அணிந்திருந்த காலணியின் உள்ளாடைகளுக்குள் இருந்தும், மற்றைய சீனப் பயணியின் பயணப் பையிலிருந்தும் 87 கைபேசிகளும் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 140 மின்கலங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த மூவரையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

