முக்கிய செய்திகள்

அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு பின்னடைவு இல்லையென்கிறார்கள் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால், இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பாரிய மாற்றங்களோ அல்லது பின்னடைவோ ஏற்படாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார், இருப்பினும் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதை அமெரிக்கா விலகுவதைக் காரணங்காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உறுப்புரிமையிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா வெளியேறுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கை விவகாரத்தில் தோற்றுவிக்கக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பில் பலரும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள அமெரிக்கா எதிர்வரும் 58 ஆவது அமர்வில் வெளியேறவுள்ளதால் நாட்டுக்குப் பெரும் சாதகநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதுபற்றிக் கருத்துரைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின்கீழ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியதாகவும், அப்போது இலங்கை குறித்த தீர்மானத்துடன் தொடர்புடைய நகர்வுகளை பிரிட்டன் தலைமைத்துவம் வழங்கி முன்னெடுத்துச்சென்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே இம்முறை மீண்டும் அமெரிக்கா விலகும் பட்சத்தில், இலங்கை தொடர்பான நகர்வுகளை பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய இணையனுசரணை நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் எனவும், அதில் பின்னடைவு ஏற்படும் என்று தான் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்குத் தாம் உத்தேசித்திருப்பதாகவும் சுமந்திரன் கூறினார்.

அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க பாரிய மாற்றங்கள் எவையும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனால் இலங்கை தொடர்பான தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதை அமெரிக்கா விலகுவதைக் காரணங்காட்டி அரசாங்கம் நியாயப்படுத்தக்கூடும் என விசனம் வெளியிட்டார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp