முக்கிய செய்திகள்

வடகிழக்கு உட்பட அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையை தொடர்வோம் – சுதந்திர தின வாழ்த்து ஜனாதிபதி

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி யுகத்துக்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும் இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்துக்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

இன்று நாம் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்துக்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம்.

நாம் தற்போது இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் ஓர் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும்.

அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தி அடைந்த நவீன இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த நான்கு மாதங்களில் வலுவான பொருளாதார அடிப்படையில் நாட்டை ஸ்திரப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துதல், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பிலான புதிய முன்னுதாரணத்துக்காக அர்ப்பணித்தல், இனவாதம், மதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம், கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துவது, ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

கிராமப்புற வறுமையை ஒழித்தல் உட்பட முக்கிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான எமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களை கைவிடாத அணுகுமுறையை உறுதிப்படுத்தும் நலன்புரி பொறிமுறையை உருவாக்குதல், நாம் தவறவிட்ட புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துகொள்ள பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்க தேவையான முதல் நடவடிக்கைகளை எடுத்தல், ஊழல் ஆட்சியாளர்கள் நிறைந்த நாடு என்று முன்பு காணப்பட்ட பிம்பத்தை நீக்கி, உலகின் அனைத்து நாடுகளுடனும் மிகவும் நம்பகத்தன்மையுடன் கொடுக்கல் – வாங்கல் செய்யக்கூடிய நாடென சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை மீள அடையாளப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறாக, ஊழல் ஆட்சியாளர்களின் ஆயிரம் அவதூறுகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்த நாட்டின் பொது மக்களால் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கம் சீராக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எமது வாக்குறுதியின்படி, இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.

அதன்படி, மேற்கூறிய அடிப்படையில், பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவை நனவாக்கிக்கொள்ள வரலாற்றில் மிகவும் ஆக்கபூர்வமான பணிகளை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது.

அதற்காக, அனைத்து இலங்கை மக்களையும் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறும், 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்துக்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp