கிளிநொச்சியில் காட்டினை அழித்து சுமார் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதம் முறையில் கையகப்படுத்த முயன்ற தனியார் ஒருவரின் செயற்பாடு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தொடரும் நிலையில் குறித்த நபருக்கு எதிராக 06 வழக்குகள் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் தொடரப்பட்டு, அந்த வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என வனப்பாதுகாப்பு திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் பகுதி காட்டினை சட்டவிரோதமான முறையில் சுமார் 29 ஏக்கர் காட்டினை அழித்து , குறித்த பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையில் தனியார் ஒருவரும் , அவர் சார்ந்த குழுவினரும் ஈடுபட்டுள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன
காட்டினை அழித்தது மாத்திரமின்றி , ஒரு பகுதியில் கற்றாழை தோட்டங்களை உருவாக்கியுள்ளதுடன் , சட்டவிரோத கட்டடங்களையும் நிர்மாணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் கடந்த 2025ஆம் ஆண்டு வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.
காட்டினை அழித்து , பண்ணைகளை உருவாக்கவும் , அதனுள் பாரிய ஆடை தொழிற்சாலை ஒன்றினை உருவாக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
அங்கு பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்து அப்பகுதியை சார்ந்த சிலரின் ஆதரவினையும் பெற்று , காடழிப்பை பெருமெடுப்பில் மேற்கொண்டு வந்தனர் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு விடயம் தெரிய வந்து . அதற்கு எதிராக நடவடிக்கைளை முன்னெடுத்த போதே , சுமார் 29 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளமையும் , அதற்குள் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
கட்டங்களுக்கு பிரதேச சபை உள்ளிட்ட எங்கும் எவ்வித அனுமதிகளும் பெறப்படாமல் ,கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரின் கண்காணிப்புக்களை மீறியும் , காடழிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் 2026ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் இது தொடர்பில் தெரியப்படுத்தி , உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் , கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் காடழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தி , தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு தொடர்பு பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தி இருந்தனர்.
அதனை அடுத்து துரித நடவடிக்கைகளை முன்னெடுத்த வனப்பாதுகாப்பு திணைக்களத்தினர் பிரதான சந்தேக நபரை கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிணையில் வெளியே வந்தவர் , மீண்டும் காடழிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் வழக்கு விசாரணைக்கு செல்லாத நிலையில் , கடந்த ஜூலை 14ஆம் திகதி நீதிமன்றினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் காடழிப்பு நடைபெறுவதாக தகவல் அறிந்து , நடவடிக்கைக்காக வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் , பொலிசார் செல்லும் போது காடழிப்பில் ஈடுபடுவார்கள் அப்பகுதிகளில் இருந்து தப்பியோடி விடுவார்கள்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அதிகாரிகளின் வாகனங்கள் , பொலிசாரின் வாகனங்கள் அப்பகுதிக்குள் நுழைவதனை கண்காணிக்க ஆட்களை சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தி வைத்திருப்பதும் , வாகனங்கள் அப்பகுதிக்குள் நுழைந்ததும் , அவர்களுக்கு தகவல் வழங்குநர்கள் , தகவல் வழங்கியதும் , காடழிப்பில் ஈடுபடும் கும்பல்கள் அவ்விடங்களில் இருந்து தப்பி சென்று விடுவார்கள் என்ற தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அதனை அடுத்து பொலிஸ் விசேட அதிரடி படையினரின் உதவியை பெற்று , இரகசிய திட்டம் தீட்டிய வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் , ” ட்ரோன்” காமராக்களை பயன்படுத்தி , காடழிப்பு நடைபெறுவதனை உறுதிப்படுத்தி , அதற்கான ஆதாரங்களாக புகைப்படங்கள் காணொளிகளை பெற்றுள்ளனர்.
பின்னர் கடந்த வியாழக்கிழமை மீண்டும் “ட்ரோன்” காமராக்களை பறக்க விட்டு , அன்றைய தினமும் காடழிப்பு இடம்பெறுவதனை உறுதி செய்து கொண்டு , தமது உத்தியோகபூர்வ வாகனங்களை விடுத்து , தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அதில் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்துள்ளனர்.
காடழிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் காடழிப்பில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
அதனை அடுத்து அதிகாரிகளுடன் முரண்பட்டவர்கள் , வெடிகளை கொளுத்தி , பலரை ஒன்று திரட்டவும் முயற்சித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்ய முயன்ற பொலிஸ் விசேட அதிரடி படையினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் , பொலிஸ் விசேட அதிரடி படையினரும் , வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர்.
தொடர்ந்து பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 09 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை அப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வருவதற்குள் பலர் கூடி , கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் , குழப்பங்களையும் ஏற்படுத்தினர்
மீண்டும் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து கடுமையான போராட்டத்தின் மத்தியில் கைது செய்யப்பட்டவர்களுடன் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 08 பேரையும் நீதிமன்றில் முற்படுத்திய அதிகாரிகள் காடழிப்பினை மேற்கொண்டதுடன் , அதனை தடுக்க சென்ற அதிகாரிகளும் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி மன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்புக்கும் மன்று திகதியிட்டுள்ளது
அதேவேளை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,
குறித்த நபரின் ஆடை தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனை அண்டிய அவருடைய ஆளுகைக்குள் உள்ள காணிக்குள் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் உட்செல்ல கூடாது , அவரது விவசாய நடவடிக்கை உள்ளிட்ட , ஏனைய வேலைகளை குழப்ப கூடாது பிறிதொரு வழக்கில் நீதிமன்ற கட்டளை உள்ளதாகவும் , அதனையும் மீறியே அன்றைய தினம் வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் விசேட அதிரடி படையினர் அவ்விடத்திற்கு சென்றதாகவும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்
அத்துடன் , குறித்த கற்றாழை தோட்டம் மற்றும் ஆடை தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காட்டு பகுதி என வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கொன்றில் , அப்பகுதியில் எவ்வித வேலைகளையும் முன்னெடுக்க கூடாது என அதன் உரிமையாளருக்கு நீதிமன்று இடைக்கால தடை விதித்து இருந்தது.
குறித்த இடைக்கால தடைக்கு எதிராக உரிமையாளர் மேல் நீதிமன்றில் தொடர்ந்த மீளாய்வு விண்ணப்பத்தில் , நீதவான் நீதிமன்றின் இடைக்கால தடையை இரத்து செய்த மேல் நீதிமன்று, அந்நிறுவனம் தனது செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுக்கவும் அனுமதித்துள்ளது.
இவ்வாறான நிலையிலையே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை குறித்த நபரின் கற்றாழை தோட்டம் ,மற்றும் ஆடை தொழிற்சாலையில் பலர் வேலை செய்து வருவதாகவும் , இவ்வாறான செயற்பாடுகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
காடழிப்புக்களையும் , காட்டு நில ஆக்கிரமிப்புகளையும் கட்டுப்படுத்த வேண்டியது வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பாரிய கடமையாகும். அதேவேளை சட்ட ரீதியான முன்னெடுப்புக்களையும் மற்றையவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க கூடாது எனும் தார்மீக பொறுப்பும் உண்டு.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் நடைபெற்று , சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க போவதில்லை.

What’s your Reaction?

