கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுக் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நேற்று (22) மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, இக்குழந்தை பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளது.
தாயும் குழந்தையும் அருகிலுள்ள அயலவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதன்போது, தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காகக் குழந்தையை அயலவர் வீட்டிலேயே விட்டுவிட்டுத் தாய் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர், அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணாததால், அக்குடும்பத்தினர் தாயிடம் சென்று குழந்தை வீட்டிற்கு வந்துள்ளதா? என வினவியுள்ளனர்.
அங்கும் குழந்தை இல்லாததால் பதற்றமடைந்த அவர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் குழந்தை விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாகக் குழந்தையை மீட்டு, தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பிரமந்தனாறு, ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், தருமபுரம் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளி இணைப்பு:https://www.facebook.com/reel/2066912730893712
What’s your Reaction?

