வெற்றிலை உண்ணும் பழக்கம் நீண்டகாலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புற்றுநோய் மட்டுமன்றி வேறு பல புற்றுநோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி அண்மையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இணைந்து பூநகரிப் பிரதேச சபையினரின் ஒழுங்குபடுத்தலில் பூநகரி சந்தைப்பகுதியில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கான கருத்தமர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வெற்றிலை உண்ணும் பழக்கத்திலிருந்து உடனடியாக விலகி வாய்ச் சுகாதாரத்தைப் பேணுவது உங்கள் ஆயுளை நீடிக்கும்.
வெற்றிலை மெல்லும் பழக்கமுடையவர்கள் அதனுடன் பாக்கையும் சேர்ப்பதால் புற்றுநோய் அபாயம் அதிகரப்பதோடு அதனுடன் புகையிலை சுண்ணாம்பைச் சேர்ப்பது இன்னும் அதிகளவில் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
நாம் எமது வாய்ச்சுகாதாரத்தை பேணவேண்டும். தினமும் காலை, இரவு உணவுண்டு அரைமணி நேரத்தினுள் புளோரைட் உள்ள பற்பசையை தூரிகையைப் பயன்படுத்தி பல் துலக்குவது மிகவும் அவசியம்.
பல்வைத்தியரை ஆறுமாதங்களுக்கு ஒருதடவை சந்தித்து ஆலோசனை பெறுவதும் பற்சொத்தையின் ஆரம்பத்திலேயே அதனை அடைத்துக்கொள்ளுதல் மற்றும் எமது வாயையும் அதன் உட்புறங்களையும் நாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்தி ஆரம்ப அறிகுறிகளை இனங்கண்டு சிகிச்சை பெறுதல் சிறந்தது என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
