உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஒப்பந்த காறரின் பொறுப்பற்ற செயலால் யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்..!

யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

43 வீதிகள் புனரமைப்பு.

வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை சிவா கட்டடத்தாரர் ஒப்பந்த அடிப்படையில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தனர்.

570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள்

வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரர் , வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை பூர்த்தி செய்தது கடந்த 13ஆம் திகதியே. அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் புனரமைப்புக்கு 76 நாட்கள் எடுத்திருந்த நிலையிலும் , வீதியின் புனரமைப்பில் திருப்தி இல்லை என அயலவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ,நேற்றைய தினம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் வீதி புனரமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்

கூட்டத்தில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது,

மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிக்காக டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் ,பிரதேச செயலருடன் அது தொடர்பில் பல்வேறு தடவைகள் தொடர்பு கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படாதமை குறித்து தெரிவித்து வந்தேன்.

அவரும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் பொங்கலுக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் அவை எவையும் நடைபெறவில்லை.

அதேநேரம் மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது. வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி ,வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்திடம் கோரிக்கை வைத்தேன்.

அதேநேரம் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன். அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.

இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது , என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர்.

பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர்.

அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ,ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர். தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர்.

76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை.

எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்தார்.

அதனை அடுத்து வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மீள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் எனவும் , வீதிகளின் தரம் தொடர்பில் மீள் சோதனை செய்யப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது .

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp