மண்டதீவு தீவில் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டமானது, சுற்றுச்சூழல் பரிந்துரைகளை மீறி முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்திட்டத்தின் எதிர்காலம் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் இறுதித் தீர்மானம் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கைகளின் முடிவுகளிலேயே தங்கியுள்ளதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, இவ்வாறான பாரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டியதுடன், 30 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துக்களுக்காகவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதன் பின்னரே தொழில்நுட்பக் குழுவினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட முடியும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இப்பகுதியில் ஏற்படும் வெள்ள அபாயம், பறவைகளின் வாழ்விடங்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே முறையான சுற்றுச்சூழல் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
40,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரமாக இத்திட்டத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இது ஒரு உணர்திறன் மிக்க ஈரநில சுற்றுச்சூழல் பகுதி என்பதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கவலை வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், அரசாங்கம் இதுவரையில் இத்திட்டத்தை முழுமையாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கவில்லை எனவும், உரிய அமைச்சுக்களுடன் ஒருங்கிணைந்து சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
