நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் பாரிய அளவிலான எரிவாயு இறக்குமதியினை முன்னெடுத்துள்ளன.
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இந்த புதிய கையிருப்புடன், நடப்பு மாதத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிவாயுவின் அளவு 28,000 மெட்ரிக் தொன்னைத் தாண்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை காலை முதல் இந்த எரிவாயு கையிருப்பை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், நாளாந்தம் சந்தைக்கு விடுவிக்கப்படும் எரிவாயுவின் அளவை 1,200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,700 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கவும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் தனது எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது மாலைதீவில் எரிவாயுவை ஏற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள இக்கப்பலைத் தொடர்ந்து, தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பிரதான நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
