இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் துகள்களை அபாயகரமான பொருட்களாக வகைப்படுத்துமாறு சர்வதேச அளவில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த கோர விபத்தினால் இலங்கையின் கடற்கரைகள் மாசடைந்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச கடல்சார் சட்டங்களில் அவசர சீர்திருத்தங்களைக் கோரி உலகளாவிய விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.
‘நர்டில்ஸ்’ எனப்படும் இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள், கடல் சூழலுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை என சர்வதேச கடல்சார் அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கப்பல் போக்குவரத்தின் போது இத்தகைய துகள்கள் கடலில் கலப்பது, கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியைச் சிதைப்பதுடன், மில்லியன் கணக்கான பறவைகளின் உயிரிழப்பிற்கும் காரணமாக அமைகின்றன.
குறிப்பாக, இந்த துகள்கள் நச்சு இரசாயனங்களை உறிஞ்சி கடலின் பல பகுதிகளுக்குக் கடத்துவதால், மனித ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் விபத்தின் போது பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கடலில் கலந்தமை, சர்வதேச கடல்சார் விதிமுறைகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கையின் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சட்டங்கள் தற்செயலான கசிவுகளைக் கையாள்வதற்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே பிளாஸ்டிக் துகள்களை ‘அபாயகரமான சரக்குகள்’ என வகைப்படுத்தி, அவற்றைக் கையாளுவதற்கு கடுமையான சர்வதேச கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
