நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை கடும் நிர்வாக நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அரச சுகாதார சேவையில் 16 பிரதி பணிப்பாளர் நாயகம் பதவிகள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு முதன்மையான காரணமாகும்.
குறிப்பாக, நாட்டின் முதன்மை மருத்துவமனையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாகத் தரம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பதவிகள் அனைத்தும் பதில் கடமை அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருவதால், கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் இறுதி அங்கீகாரம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நிரந்தரப் பிரதி பணிப்பாளர் ஒருவர் இல்லாத நிலையில், கேள்வி கோரல் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக இருப்பவர், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பதால், நிர்வாகப் பணிகளில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிர்வாகச் சிக்கலால் வைத்தியசாலையில் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சுகாதார சேவையைச் சீர்செய்ய உடனடியாக நிரந்தர அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
