பொருளாதார மையங்களின் நிர்வாகத்தை புதிதாக நிறுவப்பட்ட அரச நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே வர்த்தக உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தம்புள்ளை பொருளாதார மைய வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் வர்த்தகர்களால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த பொருளாதார மையங்களை, எவ்வித முன்னறிவித்தலோ அல்லது முறையான எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளோ இன்றி அரச நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவை வர்த்தகர்கள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட அரச குழுவிடம் நிர்வாகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்கு தாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அத்துடன், பொருளாதார மையங்களின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஏற்கனவே அங்கு இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்களை விட அரச நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டினர்.
இத்தகைய நடவடிக்கைகள் தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என அவர்கள் எச்சரித்த நிலையில், அமைச்சருக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.
இது தொடர்பாக அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் ஒருவர், ஏழு இயக்குநர்களைக் கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘தேசிய விவசாய சந்தை சேவைகள் லிமிடெட்’ எனும் அரச நிறுவனத்திடம் இந்த நிர்வாகத்தை மாற்றுவதன் நோக்கம், மையங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும், நவீனமயப்படுத்துவதும் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுமே ஆகும் என விளக்கமளித்தார்.
