பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை உறுதி செய்வதில் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான நிதி கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், அரசின் செலவுகள் பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது.
தற்போதைய சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் கடினமாகப் பெற்ற நிதிச்சீர்திருத்த முன்னேற்றங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பேரிடர் மீட்பு செலவுகள் வெளிப்படையாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மீள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையில் கிடைத்த முன்னேற்றங்களைப் பாதுகாப்பதோடு, பொது முதலீட்டு முகாமைத்துவத்தை வலுப்படுத்தவும்,;, செலவினங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்துக்கு இணங்கவும் மேற்கொள்ளப்படும் என இலங்கையின் உயர் நிலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய பிரதிநிதி எவன் பாப்பஜோர்ஜியூ சமீபத்திய பயணத்துக்குப் பின் தெரிவித்துள்ளார்.
சூறாவளியால் அதிகமாக பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க சமூக பாதுகாப்பு வலையமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, மீள்கட்டமைப்பிற்காக சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ள போதும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த அரசின் முயற்சிகள் இதுவரை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னணி பொருளாதார நிபுணர் பேராசிரியர் ரோஹன் சமரஜீவா கருத்து தெரிவிக்கையில், சூறாவளி பேரிடர் கடன் நிலைத்தன்மையையும் பேரிடர் மீட்பு தேவைகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய கடினமான தெரிவுகளை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம் தடுமாறாமல் இருக்க, பெரிய அளவில் சேதமடைந்த கட்டமைப்பு வசதிகள் விரைவாக பழுது பார்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
