இலங்கைப் பொலிஸில் சுமார் 32,000 வெற்றிடங்கள் நிலவி வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, பொலிஸ் துறை தேவையான மனிதவள அளவைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் (30) காலை குற்றப்புலனாய்வு துறையுடன் இணைக்கப்பட்ட கைரேகை அதிகாரிகள், குற்ற பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் நீதிமரபியல் புகைப்படக்காரர்களின் குற்ற விசாரணைகளில் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மேலும் 2,700 அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கைப் பொலிஸ் துறைக்காக 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
