டிக்டொக் வழியாக பழகியவர்களை மயக்க மருந்து கொடுத்து பணமும் தங்க நகைகளும் அபகரித்ததாகக் குற்றச்சாட்டில் 28 வயதுடைய ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொரளஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, சந்தேகநபர் டிக்டொக் மூலம் தனியார் வங்கிப் பணியாளருடன் நட்பு ஏற்படுத்தி, கடந்த 19ஆம் தேதி கொழும்பிலுள்ள பெரிய வணிக வளாகம் ஒன்றில் உள்ள உணவகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
அங்கு, பாதிக்கப்பட்ட நபருக்கு தெரியாமல் மயக்க மாத்திரைகளை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் மயக்க நிலையில் தன்னுணர்வு இழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை பொரளஸ்கமுவ பகுதியிலுள்ள ஓர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவருடைய தங்க நகைகளை அபகரித்ததுடன், வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரூ. 2,58,000 பணமும் பெற்றுக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, பன்னிப்பிட்டிய பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போது அவரிடமிருந்து, மயக்க மாத்திரைகள் ஐந்து மற்றும் பல நாணயத் தாள்கள் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணைகளில், இதே முறையைப் பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர் ஒருவரையும் மயக்கி கொள்ளையடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இரண்டு பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மொத்தமாக ரூ. 20 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் நகைகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
