முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இந்த தகவலை நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளிநாட்டு பயணம் உத்தியோகபூர்வமற்றதாக இருந்ததாகவும், அதற்காக அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
