கொழும்பு நகரில் நிலவும் அதிகப்படியான வீட்டு வாடகையினைக் கட்டுப்படுத்தி, சாமானிய மக்களும் வசிக்கக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில், தனியார் துறைக்கு சவாலாக அரசாங்கமே மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.
கொழும்பில் பணிபுரிந்து கொண்டு, தினசரி நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சின் பிரதி அமைச்சர் டி.பி. சரத், கொழும்பு நகரில் பணிபுரிவோர் தங்களது பணி ஓய்வுக்காலம் வரை இக்குடியிருப்புகளில் தங்கியிருக்க அனுமதிக்கும் வகையில் விசேட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 3,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கொழும்பில் பணிபுரிவோருக்கான இந்த புதிய திட்டத்திற்கான நிதியினை 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் நிரந்தர வசிப்பிடங்கள் இல்லாத கலைஞர்களுக்காகவும் பிரத்யேக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உலகளவில் வீடுகள் வாங்குவதற்கு அல்லது வாடகைக்கு பெறுவதற்கு கடினமான நகரங்கள் குறித்து ‘நம்பியோ’ (ரேஅடிநழ) நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், கொழும்பு நகரம் மிகவும் அதிக செலவுமிக்க நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விலை 55.1 சதவீதம் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையை மாற்றியமைத்து, சாதாரண மக்களுக்கும் கொழும்பு நகரை அணுகக்கூடிய இடமாக மாற்றுவதே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
