பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் தீவிரமாக அதிகரித்து வருவதாக ஒக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டில் மட்டும் உலகின் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம், உலக கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 18.3 டிரில்லியன் டொலராக, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உலகின் பாதி ஏழை மக்களின் மொத்த சொத்து மதிப்புக்கு சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரருக்கு அரசியல் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 4,000 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஒக்ஸ்பாம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்துவரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு போதிய உணவு கூட கிடைப்பதில்லை என்றும், உலக மக்கள் தொகையின் பாதி பேர் வறுமையில் வாழ்ந்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக காலத்தில், பணக்காரர்களுக்கு சாதகமாக வரிகள் குறைக்கப்பட்டதும், பெரு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், கோடீஸ்வரர்களின் சொத்து அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்ததாக ஒக்ஸ்பாம் விமர்சித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலையும் அபாயம் ஏழு மடங்கு அதிகம் என்றும் ஒக்ஸ்பாம் எச்சரித்துள்ளது.
இதற்குத் தீர்வாக, பணக்காரர்களின் மீது அதிக வரி விதிப்பது, அரசியலில் பணத்தின் ஆதிக்கத்தை குறைப்பது, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்களை உருவாக்குவது அவசியம் என ஒக்ஸ்பாம் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவின் இடஒதுக்கீடு முறை அதிகாரத்தை ஜனநாயகமாக பகிரும் ஒரு சிறந்த வழி எனவும் அந்த அறிக்கையில் ஒக்ஸ்பாம் பாராட்டியுள்ளது.

