ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத் தகவல்களின்படி, தேசிய கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கல்வி நிறுவத்தின் கல்வி விவகாரப் பிரிவுடன் இணைந்து பாடத்தொகுப்பை தயாரித்த எழுத்தாளர்கள், அதனை பரிசீலனை செய்தவர்கள், தொகுத்தவர்கள் மற்றும் சரிபார்த்த அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இதனிடையே, தேசிய கல்வி நிறுவனத்தின் பாடத்தொகுப்பு தயாரிப்பு நடைமுறை தொடர்பாக தனியான ஆரம்ப விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விசாரணையை ரஞ்சித் ஆரியரத்தின தலைமையிலான குழு முன்னெடுத்து வருவதாகவும், இரு விசாரணைகளின் அறிக்கைகளும் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுர சேனேவிரத்ன, தேசிய கல்வி நிறுவனத்தில் பாடத்தொகுப்பு தயாரிப்பு செயல்முறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாடப்பிரிவு நிபுணர்கள் அடங்கிய குழுவின் வழிகாட்டுதலுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஜனவரி 16ஆம் திகதி தேசிய கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணை அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததனைத் தொடர்ந்து, விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும், அவரது பொறுப்புகள் நிர்வாக ரீதியிலேயே இருந்ததனால், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
