போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும் வரை இலங்கை மீது பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டோரை விசாரித்து தண்டிப்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டாய கடப்பாடாகும் என்றும், அது நிறைவேற்றப்படாத நிலையில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் இலக்கிடப்பட்ட தடைகள், குற்றவியல் விசாரணைகள் மற்றும் வழக்குத் தாக்கல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தயாரித்த, யுத்தகால பாலியல் வன்முறைகள் குறித்த 30 பக்க அறிக்கை கடந்த 13ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதில், இலங்கையின் ஆயுத மோதல் காலத்திலும் அதன் பின்னரும் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தற்செயலான சம்பவங்கள் அல்ல என்றும், அவை வேண்டுமென்றே பரந்துபட்ட முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஒரு பகுதியாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் தகவல்களைப் பெற, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, தனிநபர்களையும் சமூகங்களையும் ஒடுக்க மற்றும் அச்சம், அவமானம் ஆகியவற்றை உருவாக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, இவ்வாறான பாலியல் வன்முறைகளை போர்க்குற்றங்களாகவும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருத முடியும் என தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்யவும் இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும், பாதிக்கப்பட்டோர் எதிர்கொண்டு வரும் மருத்துவ மற்றும் சமூக பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அவசர மருத்துவ உதவிகள் மற்றும் இடைக்கால நிவாரணங்களை வழங்க இலங்கை அரசும் சர்வதேச பங்காளிகளும் இணைந்து செயல்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் நிறுவப்பட்ட போதிலும், 26 ஆண்டு கால யுத்தத்தின் போது நிகழ்ந்த சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் இதுவரை நம்பகமான விசாரணைகளும் தண்டனைகளும் அமல்படுத்தப்படவில்லை. 2024ஆம் ஆண்டு ‘நீதியை நிலைநாட்டுவோம்’ என்ற வாக்குறுதியுடன் பதவியேற்ற தற்போதைய அரசாங்கத்தினாலும் இதுவரை கணிசமான முன்னேற்றம் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
