அனைத்து புpனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு கொழும்பு 8ல் உள்ள அனைத்து புனித தேவாலய வளாகத்தில் கை குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்திருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தேசிய தகவல் தொடர்பு இயக்குநர் ஜூட் கிரிஷாந்த ஃபெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு முன்பு குற்றப் புலனாய்வு இயக்குநர் தம்மை சந்தித்து புதிய விசாரணை குறித்து அறிவித்ததாகவும், அதனை கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்துக்கும் தெரிவிக்குமாறு கேட்டதாகவும் கூறினார்.
ஆனால் அதன் பின்னர் விசாரணை தொடர்பில் எந்த முன்னேற்றமும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்க காலத்தில் இந்த சம்பவம் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக திருச்சபை நம்புவதாகவும், சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து இதுவரை தெளிவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் உண்மை நிலையை மேலும் தாமதமின்றி அரசாங்கம் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பொரெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமிருந்து விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை கோரப்படுவதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
2022 ஜனவரி 11 ஆம் திகதி மாலை பொரெல்லவில் உள்ள அனைத்து புனித தேவாலய வளாகத்தில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது விசேட அதிரடிப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அதன் பின்னணி மற்றும் நோக்கம் குறித்த உத்pயோகப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
