உலக வல்லரசுகள் பிற நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை மதிக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்கா திடீரென அதிகாரத்தை கைப்பற்றியதையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்தியதையும் மறைமுகமாகக் கண்டிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகம் தற்போது பெரும் மாற்றங்களையும் குழப்பங்களையும் எதிர்கொண்டு வருவதாகவும், ஒருதலைப்பட்சமான மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை பாதிப்பதாகவும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
பிற நாடுகளின் மக்கள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வளர்ச்சி வழிகளை மதிக்க வேண்டும் என்றும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை அனைத்து நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெரிய சக்திகள் இதில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக சீனா தெரிவித்துள்ளதுடன், வெளிப்புற அழுத்தங்களின்றி பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பில் ஈடுபட வெனிசுலாவுக்கு உரிமை உண்டு என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக மதுரோவும் அவரது மனைவியையும் உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சீனா நீண்ட காலமாக வெனிசுலாவின் முக்கிய கூட்டாளியாகவும், அதன் எண்ணெய் வாங்கும் பிரதான நாடுகளில் ஒன்றாகவும் இருந்து வருவதுடன், அந்த நாட்டின் முக்கிய முதலீட்டாளராகவும் கடன் வழங்குநராகவும் செயல்பட்டு வருகிறது.

