மக்களின் நம்பிக்கையைப் பெறும் திறமையானதும் ஊழலற்றதுமான பொலிஸ் சேவையை உருவாக்க வேண்டிய அவசியம் மிக அவசரமானது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வலியுறுத்தியுள்ளார்.
அரச சேவைகள் தொடர்பாக, குறிப்பாக பொலிஸ் துறையைச் சுற்றி சமூகத்தில் நிலவும் எதிர்மறை கருத்துகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்காக அரசு உறுதியுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.
சமூகத்தில் அரச சேவைகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன் அதில் பொலிஸ் துறையும் விதிவிலக்கல்ல.
திறமையானதும் ஊழலற்றதுமான அரச சேவையையே உருவாக்குவது அரசின் இலக்காகும்; அதில் பொலிஸ் துறையும் அடங்கும் என அமைச்சர் கூறினார்.
நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பரவல் குறித்து கவலை வெளியிட்ட அவர், இவை நாட்டின் பாதுகாப்புக்கு தீவிர ஆபத்தாக உள்ளன என்றார்.
இவற்றை கட்டுப்படுத்த அரசு ஏற்கனவே திடமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அச்சமின்றி நடவடிக்கைகள் தொடரும் எனவும் உறுதியளித்தார்.
சிலரின் தவறான நடத்தை காரணமாக முழு பொலிஸ் சேவையும் குற்றம்சாட்டப்படக்கூடாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களால் மதிக்கப்படும் ஒரு பொலிஸ் படையை உருவாக்குவது காலத்தின் தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இன்றைய சவால்களை எதிர்கொள்ள பழைய அமைப்பு போதுமானதல்ல என தெரிவித்த அவர், பொலிஸ் துறையில் நவீனமயமாக்கலும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் அவசியம் என்றார்.
பொலிஸ் துறைக்கு புதிய அறிவும் புதுமைகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல சீர்திருத்தங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
