மக்கள் விடுதலை முன்னணி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சுதந்திரமும் இறைமையும் கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அமெரிக்கா அத்துமீறி நுழைந்து, மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்றது கடும் இராணுவத் தலையீடும் ஆக்கிரமிப்புமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
உலகின் எந்த ஒரு சுதந்திர நாட்டைப் போலவே, வெனிசுலாவின் எதிர்காலத்தையும், அந்நாட்டை ஆளுபவர்கள் யார் என்பதையும் தீர்மானிக்கும் முழு அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது என்றும், அதனை மீற எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை ஆகியவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை கோட்பாடுகள் என குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி, எந்த காரணத்திற்காகவும் ஒரு நாட்டுக்குள் இராணுவத் தலையீடு அல்லது ஆக்கிரமிப்பை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட பலவந்தமான இராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது என தாம் நம்புவதாகவும், அந்த நடவடிக்கையை தாங்கள் உறுதியாகக் கண்டிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
மேலும், வெனிசுலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் குரல் எழ வேண்டும் என்றும், அந்தப் போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தனது ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
