பிரபல யூடியூபர் மற்றும் குத்துச்சண்டையாளர் ஜேக் பால் மற்றும் இலகு எடை சாம்பியன் ஜெர்வொன்டா “டேங்க்” டேவிஸ் ஆகியோருக்கிடையேயான நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த குத்துச்சண்டை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி மியாமி, புளோரிடாவில் நடைபெறவிருந்தது. ஆனால் கடந்த வாரம் மியாமி-டேட் கவுண்டியில் டேவிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு காரணமாக, ஜேக் பாலின் விளம்பர நிறுவனம் ‘மோஸ்ட் வாலியூபிள் புரொமோஷன்ஸ்’ (MVP) போட்டியை நிறுத்திவைத்தது.
MVP நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நகிஸா பிடேரியன் தெரிவித்துள்ளார்: ஜேக் பால் இவ்வருட இறுதிக்குள் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஒளிபரப்பப்படும் மற்றொரு குத்துச்சண்டை நிகழ்வில் தலைமைப் போட்டியாளராக பங்கேற்பார் எனவும், அதற்கான எதிரணி, தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
முதலில் அட்லாண்டாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி, பின்னர் புளோரிடாவுக்கு மாற்றப்பட்டது. எடை வித்தியாசம் 50 பவுண்டுகளாக இருந்தபோதும், அங்கு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஜேக் பால் (12 வெற்றி, 1 தோல்வி, 7 நாக் அவுட்) தனது யூடியூப் குத்துச்சண்டை போட்டிகள் மூலம் பிரபலமடைந்தவர். 2024 ஆம் ஆண்டு முன்னாள் கன எடை உலக சாம்பியன் மைக் டைசனுடன் மோதியதன் மூலம் மேலும் புகழ்பெற்றார். அவருக்கு எதிராக 30 வெற்றி, 1 சமநிலை கொண்ட ஜெர்வொன்டா டேவிஸ் தற்போது WBA சாம்பியனாக உள்ளார்.
இந்த போட்டி உலகளாவிய அளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், டிக்கெட் வாங்கிய பார்வையாளர்களுக்கு ‘டிக்கெட் மாஸ்டர்’ வழியாக பணம் திருப்பி வழங்கப்படும் என MVP நிறுவனம் அறிவித்துள்ளது.

