உலக வங்கி வெளியிட்ட குளோபல் ஃபின்டெக்ஸ் 2025 அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இன்னும் 70 கோடி பெண்கள் வங்கி கணக்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் மொபைல் பண பரிவர்த்தனைகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பெண்களின் பண பரிவர்த்தனை முன்னேற்றம் காணப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், இந்நாடுகளில் உள்ள பெண்களில் 73 சதவீதம் பேர் வங்கி அல்லது நிதிக் கணக்கை கொண்டுள்ளனர்.
இது 2021 ஆம் ஆண்டை விட 7 சதவீதம் அதிகமாகும். முறையான சேமிப்பில் ஈடுபடும் பெண்களின் விகிதம் 22 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயன்படுத்தும் பெண்கள் 50 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
இலங்கையில், 2024 ஆம் ஆண்டில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 80.2 சதவீதம் பேர் வங்கி அல்லது மொபைல் பண பரிவர்தனை வழங்குநர்களிடம் கணக்குகளை வைத்துள்ளனர்.
ஆனால், 21.4 சதவீத பெண்களே வங்கி அல்லது மொபைல் பண பரிவர்த்தரைன கணக்குகள் மூலம் சேமிப்பு செய்துள்ளனர்.
மாதந்தோறும் சேமிப்பை மேற்கொள்வோர் 10 சதவீதம் மட்டுமே ஆகும். மேலும், 35.3 சதவீத பெண்கள் எந்தவித சேமிப்பும் செய்யவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு முக்கிய தடைகளாக பண பற்றாக்குறை, அதிக கட்டணங்கள், குடும்ப உறுப்பினரின் கணக்கின் மீது சார்ந்திருத்தல் மற்றும் நிதி சேவை நிலையங்களுக்கு உள்ள தூரம் ஆகியவை உள்ளன என உலக வங்கி கூறுகிறது.
இதன் காரணமாக, பெண்கள் நிதி சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் சேமிப்பு, கடன் பெறுதல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இன்னும் பின்தங்கியுள்ளனர். இருப்பினும், மொபைல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பெண்களின் நிதி நடவடிக்கைகளை மேம்படுத்தி வருவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
